வியாழன், 10 நவம்பர், 2011

பரிதிமாற் கலைஞர் தனித்தமிழ் முன்னோடியா?

(தொடர்ச்சி...)
    மறைமலை அடிகளின் வடமொழிப்புலமை வடமொழி மறையின் கமுக்கங்களை வெளிச்சம் போட்டுக்காட்டியது. வடமொழி  'உடன்கீழ் இருக்கை'கள் பலவற்றைத் தமிழ் அறிஞர்கள் இயற்றியிருக்கின்றனர் என்னும் உண்மையை அவரே வெளிப்படுத்தினார். அவர் நடத்திய அறிவியக்கமும் ஆராய்ச்சியும் பல குமுகாய மாற்றங்களை ஏற்ப்படுத்தின. வடவாரியப் பார்ப்பனர்களே திருமணம் நடத்தத்தக்கவர் என்பதையும் வடமொழி சொலவகங்கள் கூறியே திருமணம் நடத்த வேண்டும் என்பதையும் தகர்த்தெறிந்தவர் மறைமலை அடிகள். வடமொழி மந்திரத்தின் பொருளை வெளிப்படையாக்கி அது மணப்பெண்ணை இழிவு படுத்துவதையும் எடுத்துச் சொன்னவர் மறைமலைஅடிகள். அவர் கருத்து திராவிட இயக்கங்கள் வாயிலாக மக்களிடம் பரவிய பின்னரே தன்மானத் திருமணங்களையும் தமிழ்த் திருமணங்களையும் இன்று மக்கள் நடத்தத் தொடங்கியுள்ளனர். இந்து மதம் எனும் போர்வையில் மக்களை அடிமைப் படுத்திய ஆரியமத இருட்டை அகற்ற முயன்றவர் மறைமலை அடிகளே.
   இவ்வாறாகப் பல மாறுதல்களை விளைத்த மறைமலையடிகளையும் அவரின் தனித்தமிழ் இயக்கத்தையும் இருட்டடிப்புச் செய்யவும் ஏமாற்றவும் மாற்றார் பல சூழ்ச்சிகளைச் செய்தனர்; செய்து வருகின்றனர். அவற்றுள் ஒன்றே பரிதிமாற் கலைஞரையும் சுப்பிரமணிய சிவாவையும் நுழைத்தது.
   பரிதிமாற் கலைஞரை மறைமலைஅடிகள் பாராட்டினார். தம் பெயரைத் தனித்தமிழில் மாற்றிக் கொண்டார் என்று எண்ணியே அவர் அவரைப் பாராட்டினார். தேநேயப் பாவாணரும் அவ்வாறு எண்ணியே பாராட்டினார்; வி.கோ.சூவைத் 'தனித்தமிழ் முன்னோடி' என்றும் புகழ்ந்தார்.
   அவர்கள் பாராட்டியது பரந்த மனப்பான்மையிலும் பண்பாட்டின் அடிப்படையிலும் அமைந்ததாகும். தமிழர்கள் அயலாரைப் பாராட்டுவதில் எப்போதும் முன்னோடிகள்தானே.
   ஆனால், தனித்தமிழ்க்கு மாறான மனப்பான்மை கொண்ட சிலர் தனித்தமிழ் இயக்கத்தையே இரண்டாகப் பகுத்து மகிழ்ந்தனர். ஒன்று பார்ப்பனர் எதிர்ப்பு கொண்டது, மற்றொன்று பார்ப்பனர் எதிர்ப்பு இல்லாத் தனித்தமிழ் இயக்கம் என்னும் அவர்களின் கற்பனை.

வி.கோ.சூவின் பெயர் மாற்றம்:
   வி.கோ.சூரிய நாராயண சாத்திரியார் தனித்தமிழ்ப் பற்றினால் பெயரை மாற்றிக் கொண்டாரா என்றால், இல்லை!
   'தனிப்பாசுரத் தொகை' எனும் ஒரு நூலில் மட்டும் தம் பெயரை வி.கோ.சூ. பரிதிமாற் கலைஞர் என்று குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு வேறு பெயர் குறிப்பிட்டதற்குக் கரணியம் என்ன? அதையும் அவரே தெளவு படுத்தியுள்ளார். நூலின் உண்மை மதிப்பு விளங்குதல் ஒன்றை  நினைத்தே அப்பெயரைப் புனைப்பெயர் ஆக்கிக் கொண்டதாகத் த முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.  அவர் தம் வேறு நூல்களில் அப்பெயரைக்ப் பயன்படுத்தவில்லை. அதுமட்டுமன்றி அவருடைய காலத்தில் இரண்டாம் பதிப்பாக வந்த அதே நூலில் கூடப் பரிதிமாற் கலைஞர் என்னும் பெயரைப் பயன்படுத்தவில்லையே.
   பரிதிமாற் கலைஞர் எனும் பெயர் தோன்றுவதற்கு வேறு ஒரு கரணியமும் கூறப்படுகின்றது. அது என்ன?
  ஒருமுறை வி.கோ.சூ. பணியாற்றிய கிறித்தவக் கல்லூரிக்கு அமெரிக்கக் கல்வியாளர் மில்லர்   என்பவர் வந்தார்.அவர் வி.கோ.சூரிய நாராயண சாத்திரி எனும்பெயர் மிக நீளமாக இருப்பதாகக் கூறினார். அப்பெயர் வழங்குவதற்குக் கடுமையாக இருப்பதாகவும் கூறினார். அதனால், வி.கோ.சூ.  பரிதி மாற் கலைஞர் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார் என்னும் குறிப்பைப் 'பி.சிறி' கூறுகிறார்.
   குன்றக்குடி பெரியபெருமாள் என்பவர் கருத்தும் இங்கு எண்ணத்தக்கது. தனித்தமிழ்ப் பற்றினால் வி.கோ.சூ. தம் பெயரை மாற்றிக் கொள்ளவில்லை என்பது அவர் கருத்து.
   வி.கோ.சூ. தனித்தமிழ்க் கொள்கை கொண்டவர் அல்லர். அக்கொள்கைப் பற்றினால் அவர் tஎப்பணியையும் செய்யவில்லை. தம் நூல்களில் தனித்தமிழ் நடையைப் பயன்படுத்தவில்லை. தனித்தமிழ்ப் பற்றி நன்கு அறிந்திருந்தும் அவ்வாறு செய்ய அவர் முன்வரவில்லை.

                                                                                                                             தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக