திங்கள், 14 நவம்பர், 2011

பரிதிமாற் கலைஞர் தனித்தமிழ் முன்னோடியா?

(தொடர்ச்சி...)
   வி.கோ.சூ  பார்ப்பனர் என்பதற்காக  யாரும் அவரைப் பழித்தல் சரியன்று. ஆனால், அப்படியிருந்தும் அவர் தமிழ்ப் பற்றிய சில உண்மைகளை மறைக்காமல் வெளிப்படுத்தியுள்ளார். தமிழின் உயர்தனிச் செம்மொழிச் சிறப்பை ஒப்புக் கொண்டிருந்தார், வி.கோ.சூ.   ஆரியப் பார்ப்பனர் தமிழ்மொழி நூல்களை மொழி பெயர்த்துக் கொண்டு மூலத்தை அழித்துவிட்டனர் என்னும் உண்மைகளை எல்லாம் அவர் தம் நூல்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். இது போன்ற பல செய்திகளுக்காக அவரைப் பாராட்டுவது நல்லது.  ஆனால், அதற்காக  'தனித்தமிழ் முன்னோடி'    எனப் பாராட்டுவது சரியாகிவிடாது.
   தனித்தமிழ் முன்னோடி, தனித்தமிழ் அறிஞர், தனித்தமிழ்த் தொண்டர் என்றெல்லாம் யாரையும் எளிதில் ஒப்புக்கொள்ளவியலாது.
  அப்படிச் செய்ய வேண்டுமானால் அதற்குச் சில அடையாளங்கள் தேவை.
  1. தனித்தமிழை உளமார விரும்புதல்.
  அப்படி விரும்புபவரே தலையாய தமிழர் என்பார் பாவாணர். தனித்தமிழை விரும்புதல் என்பது என்ன?
  2. தமிழே திரவிட மொழிகளுக்குத் தாய் என்று ஒப்புக்கொள்வது.
  3. அதுவே ஆரியத்துக்கு மூலம் என ஏற்றுக்கொள்வது.
  4. தமிழன் பிறந்தகம் குமரிக்கண்டம் என்னும் அடிப்படையில் எழுதுவது.
     இப்படிச் சில அடையாலங்களிருந்தால் அத்தகையவர் தலையாய தமிழர் என்பது பாவாணரின் இலக்கணம்.
  'வடமொழியைப் பற்றி அவ்வறிஞரின் அணுகுமுறை யாது?'      என்பதும் அவரைக் கண்டுகொள்ள உதவும்.
  தமிழ் மொழிக்கும், இனத்துக்கும், நாட்டுக்கும் காலந்தோறும் சில பகைவர்கள் இருக்கின்றனர். அவர்களுள் சிலரை நாம் மறக்கவே கூடாது. அவர்களை மறந்தும் மதித்தல் கூடாது.


   சுப்பிரமணி தீட்சிதர், சாமிநாத தேசிகர்  ஆகிய இருவரைக் கட்டாயம் அடையாலன்காட்டியே ஆகவேண்டும்.  அவர்களை ஓர் அறிஞர் பாராட்டுகிறாரா, எதிர்க்கிறாரா?  என்று பார்ப்பது அவரைத் தெரிந்து கொள்ள உதவும். அவர்களைப் பாராட்டுபவர் எத்தகு சிறப்புடையவர் ஆயினும் அவர் தமிழுக்கு நலம் செய்ய மாட்டார் என்று உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

சுப்பிரமணிய தீட்சிதர்
   'பிரயோக விவாகம்' என்னும் பெயரில் ஒரு தமிழ் நூல் எழுதியவர் சுப்பிரமணிய தீட்சிதர். அந்நூலில் அவர் கூறிய தமிழுக்கு எதிரான கருத்துகளை ௧௯௭௮(1978)இல் தனித்தமிழாளர் க. தமிழமல்லன் அவர்கள் தனித்தமிழ் என்னும் நூலில் வெளிப்படுத்திக் கண்டித்திருந்தார்.
சுப்பிரமணிய தீட்சிதரின் கருத்துகள்
    1)"தமிழ் இலக்கணம் எல்லாம் பிராயிகம் வடமொழியிலக்கான வழியே ஆகும்."
   இன்னச்சுக்கருத்தை வி.கோ.சூ. கண்டிக்கவில்லை. கண்டிப்பதற்கு மாறாக அதற்குத் துணையாகத் தம் கருத்துகளை ஒரு கட்டுரையில் அப்போது வெளிப்படுத்தியுள்ளார்.
   "சுப்பிரமணிய தீட்சிதர் சொன்ன இக்கொள்கையின் உண்மையினை வடமொழி தேன்மொழியின் இயைபு" என்ற உபந்நியாசத்தில்(சொற்பொழிவில்) விரித்து இலக்கண தர்க்க சகிதமான யுக்தியோடு நியாயங்காட்டி ஊர்ஜித(உறுதி)ப் படுத்தியிருக்கிறோம்" என்று கூறுகிறார்.
    2)'அகத்தியம், தொல்காப்பியம் என்பனவற்றிற்கு முறையே பாணிநீயம், ஐந்திரம் என்னும் வடமொழி வியாகரனங்கலே முதனூல்கள்."

அவருக்கு பரிதிமாற் கலைஞரின் பாராட்டு பின்வருமாறு :
   "இவருடைய கலித்துறைகள் எல்லாம் 'இழுமெனுமொழியின்ஒழுகுறு மருவிபோற்' செவ்வனே அமைந்திருக்கின்றன. இவரின் காரிகைகளைப் படிக்கும்போதே யானந்தம் ஜனிக்கின்றது. காரிகையாள் இலக்கணம் எழுதுவதில் இவ்வளவு கைவந்தவர்கள் கிடைப்பது மிகவும் அருமை என்பது தேற்றம். இவர் உரை வகுக்கும் சாமர்த்தியமோ அற்ப்புதம்! அற்ப்புதம்!! அதிய யுக்தி பக்தியோடும் எழுதப்பட்டிருக்கிறது. இதில் அவருடைய தர்க்க சாஸ்திர வலிமை நன்கு வெளிப்படும்."
   என்று வி.கோ.சூ. தீட்சிதரைப் பாராட்டுகிறார்.
   அவர் கூறியுள்ள இன்னொரு நச்சுக்கருத்தையும் மறுக்காமலும் கண்டிக்காமலும் வி.கோ.சூ. வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த நச்சுக்கருத்து என்ன?
   இவ்வந்தணர் சிகாமணி (சு,ம. தீட்சிதர்) அகத்தியம், தொல்காப்பியம் என்பனவற்றிற்கு முறையே பாணீநீயம், ஐந்திரம் என்னும் வடமொழி வியாகரனங்களை முதநூலேன உரைப்பவர்.
இப்பிடிச் சொல்லும் வி.கோ.சூ. தனித்தமிழ் முன்னோடியா?
   இயல்பான தமிழ் உணர்வுடையவர்கள் தொல்காப்பியத்தை உயர்வாகத்தான் பேசுவார்கள். அதை இழிவு படுத்தியவர் சு.ம. தீட்சிதர்.  அவரைப் போற்றும் வி.கோ,சூவை எப்படி அழைப்பது? யாரும் தொல்காப்பியரை மாற்றுப் பெயரால் அழைக்க மாட்டார்கள். ஆனால் நம் வி.கோ.சூ. தொல்காப்பியரை 'திரண தூமாக்கினி மகாருஷி' என்று அன்பு வணங்க அழைத்து மகிழ்கிறார்.
   'தொல்காப்பியர்' என்னும் நல்ல பெயர் இருக்கும்போது அதையே மாற்றி தம் நூலில் வழங்குபவரைத் தனித்தமிழ் முன்னோடி எனக் கூறலாமா?


தொடரும்...

வெள்ளி, 11 நவம்பர், 2011

பரிதிமாற் கலைஞர் தனித்தமிழ் முன்னோடியா?

(தொடர்ச்சி...)
    வி.கோ.சூவின் நூல்கள் மானவிஜயம், கமலாம்பாள் சரித்திரம், கலாவதி, ரூபாவதி, சிவனார் சரித்திரம், சித்திரக்கவி விளக்கம், தமிழ் வியாசங்கள் முதலியவை. தனித்தமிழ் எண்ணம் கொண்டவர் எவரும் இத்தகு பெயர்களைத் தம் நூல்களுக்கு வைக்க மாட்டார் அன்றோ? பகுத்தறிவுக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர் யாரும், 'நான் கடவுள் அருளால் பாடல் புனைகிறேன்' என்று சொல்லத் துணிவாரா? ஆளுங்கட்சியர் எதிர்க் கட்சியைப் புகழ்தல் உண்டோ?
   வி.கோ.சூவின் கருத்துகளையும் எழுத்து நடையையும் பார்த்தால் அவருடைய தனித்தமிழ் எண்ணத்தின் தன்மை விளங்கும். மறைமலையடிகள் செயல்கள் போன்று ஒரு சிறு செயலையும் செய்த அடையாளம் வி.கோ.சூவிடம் காணப்படவில்லை. தந்தை பெரியாரும் ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டபின் அதற்கு உண்மையாய் இருந்தார். மதுவிலக்குக் கொள்கையை ஏற்றபின் தமக்குரிய தென்னை மரங்களை வெட்டச் செய்தார். 'சமண' மதஞ்சார்ந்தபோது திருநாவுக்கரசர் தம் பெயரை 'தருமசேனர்' என மாற்றிக்கொண்டார். வி.கோ.சூ. பரிதிமாற் கலைஞர் என்னும் பெயரைக் கூடத் தொடரவில்லையே! அவர் எழுதிய நூல்களின் நடையில் வடசொற்களை நீக்கி எழுதியதில்லை.
   கால்டுவெல் ஆய்வுகள் தமிழின் தனித்தன்மையை வெளிப்படுத்திய பின் வாழ்ந்தவர் வி.கோ.சூ.  வின்சுலோவும், சி.யூ. போப்பும் தனித்தமிழின் இயல்பை வெளிப்படுத்திய பின் வாழ்ந்தவர் வி.கோ.சூ. மறைமலையடிகள் இயக்கம் நடத்தியபோதும் அதன் வளர்விளைவுக் காலத்திலும் வாழ்ந்தவர் வி.கோ.சூ.  சிறந்த நூற்பயிர்ச்சியும் எழுத்து ஆற்றலும் நிரம்பியவர் வி.கோ.சூ.  கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் என்னும் பெரும் பொறுப்பில் இருந்தவர் வி.கோ.சூ.  சொல்ஆய்விலும்  வரலாற்றுஆய்விலும்  ஈடுபாடுடையவர். எனினும் தனித்தமிழ் உணர்வுடன் அவர் சிறு பணியையும் செய்யவில்லை.
   நீண்ட, அறிய தொடர்களமைத்து எழுதும் பழக்கமுடையவர். 'மொழி' என்பது தெரிந்தும் பாஷை என்னும் சொல்லையே பயன்படுத்தும் போக்கு எதைக் காட்டுகிறது? சாஸ்திரம், அங்கஜீவ, மனோதத்துவம், அசாத்தியம், பிரயோஜனம், பிராயிகம், விசேஷமாக, பிரபந்தம் என்னும் சொற்களையெல்லாம் பயன்படுத்தியது எதைக் காட்டுகிறது. இயலாமல், அறியாமல் பயன்படுத்துவது பொறுத்துக் கொள்ளக்கூடியது. இயன்றும் அறிந்தும் பயன்படுத்தவில்லை எனில் என்ன பொருள்? சில இடங்களில் நல்ல தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தி எழுதிய பழக்கம் அவர்க்குண்டு. அதனினும் பிறமொழிப் பெயரையே மாற்றி எழுதும் பழக்கம் அவரிடம் இருக்கிறது. பேராசிரியர் மாக்சுமுல்லரை 'மோட்சமூலப்பட்டாசாரியார்' என்றும், சேக்சுபியரை 'ஜெகப்பிரியர்' என்றும் அழைத்தார்.
   "இனி, வேதாந்த சித்தாந்த சம்பந்தமாகிய யோக தத்துவ சாஸ்திரங்களிலே சோபான முறையில் (படிப்படியாய்க்) கூறப்படும் உண்மைகளின் பயனாகிய ஏகனாகிக் சிவசாயுச்சியம் அடைந்து ஆநந்தித்தலை ஆங்கில பாஷையிலுள்ள சாஸ்திரங்களை எல்லாம் கற்று ஏப்பமிட்ட  'ஹக்ஸ்லி' (Huxley) என்னும் சாஸ்திரி வெளித்தோற்றம் என்று உரைப்பார்".
   இந்நடையில் அவரின் மூன்று வகை இயல்புகள் விளங்குகின்றன. அவரால் தனித்தமிழ் எழுதுதல் இயலும் என்பது ஒன்று. அவர் பிற சொற்களை நீக்க முயலவில்லை என்பது இரண்டாவது. தொல்காப்பியர் கூறிய, 'பிற மொழி எழுத்தை நீக்கி எழுதுக' என்பதைக் கடைப்பிடிக்கவில்லை என்பது மூன்றாவது.


தொடரும்...

வியாழன், 10 நவம்பர், 2011

பரிதிமாற் கலைஞர் தனித்தமிழ் முன்னோடியா?

(தொடர்ச்சி...)
    மறைமலை அடிகளின் வடமொழிப்புலமை வடமொழி மறையின் கமுக்கங்களை வெளிச்சம் போட்டுக்காட்டியது. வடமொழி  'உடன்கீழ் இருக்கை'கள் பலவற்றைத் தமிழ் அறிஞர்கள் இயற்றியிருக்கின்றனர் என்னும் உண்மையை அவரே வெளிப்படுத்தினார். அவர் நடத்திய அறிவியக்கமும் ஆராய்ச்சியும் பல குமுகாய மாற்றங்களை ஏற்ப்படுத்தின. வடவாரியப் பார்ப்பனர்களே திருமணம் நடத்தத்தக்கவர் என்பதையும் வடமொழி சொலவகங்கள் கூறியே திருமணம் நடத்த வேண்டும் என்பதையும் தகர்த்தெறிந்தவர் மறைமலை அடிகள். வடமொழி மந்திரத்தின் பொருளை வெளிப்படையாக்கி அது மணப்பெண்ணை இழிவு படுத்துவதையும் எடுத்துச் சொன்னவர் மறைமலைஅடிகள். அவர் கருத்து திராவிட இயக்கங்கள் வாயிலாக மக்களிடம் பரவிய பின்னரே தன்மானத் திருமணங்களையும் தமிழ்த் திருமணங்களையும் இன்று மக்கள் நடத்தத் தொடங்கியுள்ளனர். இந்து மதம் எனும் போர்வையில் மக்களை அடிமைப் படுத்திய ஆரியமத இருட்டை அகற்ற முயன்றவர் மறைமலை அடிகளே.
   இவ்வாறாகப் பல மாறுதல்களை விளைத்த மறைமலையடிகளையும் அவரின் தனித்தமிழ் இயக்கத்தையும் இருட்டடிப்புச் செய்யவும் ஏமாற்றவும் மாற்றார் பல சூழ்ச்சிகளைச் செய்தனர்; செய்து வருகின்றனர். அவற்றுள் ஒன்றே பரிதிமாற் கலைஞரையும் சுப்பிரமணிய சிவாவையும் நுழைத்தது.
   பரிதிமாற் கலைஞரை மறைமலைஅடிகள் பாராட்டினார். தம் பெயரைத் தனித்தமிழில் மாற்றிக் கொண்டார் என்று எண்ணியே அவர் அவரைப் பாராட்டினார். தேநேயப் பாவாணரும் அவ்வாறு எண்ணியே பாராட்டினார்; வி.கோ.சூவைத் 'தனித்தமிழ் முன்னோடி' என்றும் புகழ்ந்தார்.
   அவர்கள் பாராட்டியது பரந்த மனப்பான்மையிலும் பண்பாட்டின் அடிப்படையிலும் அமைந்ததாகும். தமிழர்கள் அயலாரைப் பாராட்டுவதில் எப்போதும் முன்னோடிகள்தானே.
   ஆனால், தனித்தமிழ்க்கு மாறான மனப்பான்மை கொண்ட சிலர் தனித்தமிழ் இயக்கத்தையே இரண்டாகப் பகுத்து மகிழ்ந்தனர். ஒன்று பார்ப்பனர் எதிர்ப்பு கொண்டது, மற்றொன்று பார்ப்பனர் எதிர்ப்பு இல்லாத் தனித்தமிழ் இயக்கம் என்னும் அவர்களின் கற்பனை.

வி.கோ.சூவின் பெயர் மாற்றம்:
   வி.கோ.சூரிய நாராயண சாத்திரியார் தனித்தமிழ்ப் பற்றினால் பெயரை மாற்றிக் கொண்டாரா என்றால், இல்லை!
   'தனிப்பாசுரத் தொகை' எனும் ஒரு நூலில் மட்டும் தம் பெயரை வி.கோ.சூ. பரிதிமாற் கலைஞர் என்று குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு வேறு பெயர் குறிப்பிட்டதற்குக் கரணியம் என்ன? அதையும் அவரே தெளவு படுத்தியுள்ளார். நூலின் உண்மை மதிப்பு விளங்குதல் ஒன்றை  நினைத்தே அப்பெயரைப் புனைப்பெயர் ஆக்கிக் கொண்டதாகத் த முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.  அவர் தம் வேறு நூல்களில் அப்பெயரைக்ப் பயன்படுத்தவில்லை. அதுமட்டுமன்றி அவருடைய காலத்தில் இரண்டாம் பதிப்பாக வந்த அதே நூலில் கூடப் பரிதிமாற் கலைஞர் என்னும் பெயரைப் பயன்படுத்தவில்லையே.
   பரிதிமாற் கலைஞர் எனும் பெயர் தோன்றுவதற்கு வேறு ஒரு கரணியமும் கூறப்படுகின்றது. அது என்ன?
  ஒருமுறை வி.கோ.சூ. பணியாற்றிய கிறித்தவக் கல்லூரிக்கு அமெரிக்கக் கல்வியாளர் மில்லர்   என்பவர் வந்தார்.அவர் வி.கோ.சூரிய நாராயண சாத்திரி எனும்பெயர் மிக நீளமாக இருப்பதாகக் கூறினார். அப்பெயர் வழங்குவதற்குக் கடுமையாக இருப்பதாகவும் கூறினார். அதனால், வி.கோ.சூ.  பரிதி மாற் கலைஞர் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார் என்னும் குறிப்பைப் 'பி.சிறி' கூறுகிறார்.
   குன்றக்குடி பெரியபெருமாள் என்பவர் கருத்தும் இங்கு எண்ணத்தக்கது. தனித்தமிழ்ப் பற்றினால் வி.கோ.சூ. தம் பெயரை மாற்றிக் கொள்ளவில்லை என்பது அவர் கருத்து.
   வி.கோ.சூ. தனித்தமிழ்க் கொள்கை கொண்டவர் அல்லர். அக்கொள்கைப் பற்றினால் அவர் tஎப்பணியையும் செய்யவில்லை. தம் நூல்களில் தனித்தமிழ் நடையைப் பயன்படுத்தவில்லை. தனித்தமிழ்ப் பற்றி நன்கு அறிந்திருந்தும் அவ்வாறு செய்ய அவர் முன்வரவில்லை.

                                                                                                                             தொடரும்...