வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்

தோன்றல் இரண்டு
பாவாணரின் கொள்கைகள்
     "தமிழே உலக முதன் மொழி, தமிழே திராவிடத்திற்குத் தாய், தமிழே வடமொழிக்கு மூலம்" என்னும் கொள்கைகளைக் கொண்ட பாவாணர் தம் வாழ்நாள் முழுவதும் தமிழையே எழுதியும் பேசியும் வந்தார்.  ௨௩(23) மொழிகளில் வேர்ச் சொல் காணும் பன்மொழி அறிஞராக விளங்கியவர் இவர்.
படைப்பாற்றல்
     தமிழே உயர்தனிச் செம்மொழி, தமிழ் வரலாறு, தமிழர் முதன்மொழி, முதல் தாய்மொழி, தமிழ்நாட்டு விளையாட்டுகள், தமிழர் திருமணம், வடமொழி வரலாறு, தமிழர் மதம், மண்ணிலே விண், பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும், சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள், திருக்குறள் தமிழ் மரபுரை என ௪௩(43) நூல்களும், ஏறத்தாழ ௨௦௦(200) கட்டுரைகளும் எழுதியுள்ளார்.


தேவநேயப் பாவாணர்  
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி
      பாவாணர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குனராக ௦௮.௦௫.௧௯௭௪ அன்று (08.05.1974) பணியமர்த்தம் பெற்றார். தமிழக அரசின் உதவியோடு, சொற்கள் பிறக்கும் முறையை விளக்கும் சொற்பிறப்பியல் அகர முதலி இவரால்  தொடங்கப்பெற்று இன்று சில பகுதிகள் வெளிவந்துள்ளன. இதன்மூலம் பாவாணரின் மிகுந்த பெருமை விளங்கும்.
பாவாணரின் பண்பு நலன்கள்
   "எனக்கு வறுமையும் உண்டு: மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு" என்று கூறியத் தன்மானமிக்கவர். வறுமையில் வாடுங்காலத்திலும், கையில் பணம் கிடைத்தல் நூல்களே வாங்குவார். புலமைச் செருக்கில்லாமல் மிகவும் எளிமையான வாழ்வு வாழ்ந்தவர். நன்றியுணர்வு மிக்கவர். சிறு சிறு உதவிகள் செய்தோரையும் போற்றிப் புகழும் இயல்பினர். இசையில் மிகுந்த புலமை மிக்கவர். ஆராய்ச்சியில் இமயத்தின் உச்சி. பழகுவதில் மழலைக் குழந்தை. கண்ணொளி குன்றியபோதும், தளர்நடை வந்தபோதும் தமிழ் ஆராய்ச்சியை  நெகிழவிடாத தமிழின் வடிவம்.
  "பத்து உருவா இருந்திருந்தால்  என் மனைவியை இன்னியங்கியில் கொண்டு சென்று பிழைக்க வைத்திருப்பேன்" என்பதும், "உருவா ஐந்து அனுப்பி வைத்தால் செந்தமிழ்ச் செல்விக்கு ஒரு சிறந்த கட்டுரையை அனுப்பி வைப்பேன்' என்பதும் இவர்தம் வறுமையை எடுத்துக்காட்டும் சான்றுகளாகும்.

                                                                                                                                   தோன்றும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக