வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்

தோன்றல் ஒன்று
   "உலகின் முதல் மொழி தமிழே" எனும் கருத்தை அழகுற நிலைநாட்டிய மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணரே பாவாணர் என வழங்கப்பெறுகிறார்.
   தேவநேயப் பாவாணர், ஆசிரியப் பணியில் சிறந்து விளங்கிய ஞானமுத்தருக்கும். பரிபூரணம் அம்மையாருக்கும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன் கோவிலில் ௦௭.௦௨.௧௯௦௨  அன்று (07.02.1902) பிறந்தார். இவர்தம் இயற்பெயர் தேவநேசன். இவர்தம் ஐந்தாம் அகவையிலேயே இவருடைய பெற்றோர் இயற்கை  எய்தினர். இளமையில் வறுமையில் வாடிய பாவாணர் தம் தமக்கையார் அரவணைப்பில் வளர்ந்தார்.
   முறம்பிலுள்ள சமயப் பரப்புத்துரைச் சார்ந்த பள்ளியில் இவர் தொடக்கக் கல்வி பயின்றார். அங்கிருந்த மிசெளரி நல்லஞ்சல் உலுத்திரன் சமயப் பரப்புத்துரைச் சார்ந்த நடுநிலைப்  பள்ளியில் இவர் எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றார். எங்கு என்னும் துரைமகனாரின் கடனுதவி பெற்று பாளையங்கோட்டை திருச்சபை கழக உயர்நிலைப் பள்ளியில் இவர் பதினோராம் வகுப்பு வரை பயின்று தேறினார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பண்டிததத் தேர்விலும், திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச் சங்கப் புலவர்த் தேர்விலும் பாவாணர் வெற்றி பெற்றுச் சிறப்புற்றார். பாளையங்கோட்டைப் பள்ளியில் பயின்றபோது இவரது பாட்டெழுதும் ஆற்றலைக் கண்டு வியந்த இவர்தம் ஆசிரியர் மாசிலாமணி என்பார் 'தேவநேச கவிவாணர்' என்று இவருக்குப் பெயர் சூட்டினார். இவர் இதனைத் தூய தமிழில் தேவநேயப் பாவாணர் என மாற்றிக்கொண்டார்.
   தாம் பயின்ற சீயோன்மலை எனப்படும் முறம்பிலுள்ள நடுநிலைப் பள்ளியில் இவர் ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். பின்னர் சேலம் நகராட்சிக் கல்லூரியில் பன்னிரண்டு ஆண்டு காலம் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிப் பெருமை சேர்த்தார். இறுதியாக, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்  'திராவிட மொழி ஆராய்ச்சித்துறை' வாசகராக பணிபுரிந்து தமிழில் பல்வேறு ஆராய்சிகள் செய்தார்.

                                                                                                                         தோன்றும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக