தமிழ் உலகில் தமிழ் ஆண்டு என்னும் பெயரில் வழக்கில் இருக்கின்ற பிரபவ முதல் அட்சய வரை உள்ள ௬௦(60) ஆண்டுகளின் பெயர்கள் தமிழ் இல்லை. அவை பற்சக்கர முறையில் இருப்பதால் ௬௦(60) ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை. அதற்கு வழங்கும் கதை அறிவு, அறிவியல், தமிழ் மண், மரபு, மாண்பு, பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாக இல்லை.
எனவே தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் ௧௯௨௧(1921)ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது; அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது; திருவள்ளுவர் காலம் கி.மு. ௩௧(31). தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்தார்கள்.
இந்த முடிவை ௧௮.௦௧.௧௯௩௫(18 .01.1935)ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை தாங்கிய தமிழ்க்கடல் மறைமலை அடிகள் உறுதி செய்து அறிவித்தார். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிட கிருத்து ஆண்டுடன் ௩௧(31) கூட்டல் வேண்டும் என்று கூறி, திருவள்ளுவர் ஆண்டைத் தொடங்கி வைத்தார். ௧௯௩௫+௩௧=௧௯௬௬(1935+31=1966). அதை அறிஞரவை ஏற்றுக்கொண்டது. அன்று தொட்டு அறிஞர்களால் அவ்வாண்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை , இறுதி மாதம் மார்கழி . புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். ஏழு கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ். (புதன்-அறிவன்,சனி-காரி).
ஆங்கில ஆண்டுடன் ௩௧(31) கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு.
௨௦௧௨+௩௧=௨௦௪௩(2012+31=2043).
தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று ௧௯௭௧(1971) முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், ௧௯௭௨(1972) முதல் தமிழ்நாடு அரசு இதழிலும், ௧௯௮௧(1982) முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது. நாம் இம்முறையைப் பின்பற்றவும் பரப்பவும் வேண்டும்.
உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஒப்புஅற்ற உயிர்ப்பாற்றல் நான்கு : தமிழ்மொழி , தமிழ்மறை , தமிழ்ஆண்டு , தமிழர் திருநாள் . இவற்றைப் போற்றிப் பின்பற்றிப் பரப்பினால் தமிழர் நலவாழ்வு, வளவாழ்வு,பெருவாழ்வு, புகழ்வாழ்வு பெறுவது திண்ணம்.
தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று
பல்லாயிரத் தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தைம் முதல் நாள் பொங்கல் நன்னாள்
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு
- புரட்சிப் பாவலர் பாரதிதாசன்
ஆரியர் திணித்த ஆண்டு மானம்
அதைக் கையாள்வது அவமானம்
சீரிய வள்ளுவன் பிறந்த ஆண்டைச்
செந்தமிழர் யாண்டும் கையாள வேண்டும்.
பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக